ஈரோடு: லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட 2 பேருக்கு 2 ஆண்டு சிறை
ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட 2 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள அம்மாபேட்டையை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கட்டிட அனுமதி சான்று பெறுவதற்காக, அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு விண்ணப்பித்தார்.
அப்போது, அங்கு பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வந்த கார்த்திகேயன், பேரூராட்சியில் டேங்க் ஆபரேட்டராக பணியாற்றி வந்த கோபால் ஆகியோர் கட்டிட அனுமதி சான்று வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் தர விரும்பாத செல்வராஜ் இதுகுறித்து ஈரோடு ஊழல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, அவர்களின் திட்டப்படி கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்று பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், டேங்க் ஆபரேட்டர் கோபால் ஆகியோரிடம் பணத்தை வழங்கினார்.
பணத்தை பெற்றுக்கொண்ட சில வினாடிகளில் அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் செயல் அலுவலர் கார்த்திகேயனையும், டேங்க் ஆபரேட்டர் கோபாலையும் கையும் களவுமாக பிடித்தனர். அதன் பின்னர், வழக்குப்பதிவு செய்து 2 பேரும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை ஈரோடு முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது
இந்த நிலையில், நீதிபதி ராமசந்திரன் நேற்று தீர்ப்பளித்தார். இதில் அரசு பணியை செய்ய லஞ்சம் கேட்டதற்கும், லஞ்சம் வாங்கியதற்கும் கார்த்திகேயன், கோபால் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், 2 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராதா ஆஜரானார்.
கருத்துக்கள்