சென்னை - யானை தந்தங்களை விற்க முயற்சி - 7 பேர் கைது
சென்னையில் யானை தந்தத்தை விற்க முயன்ற அடகு கடை உரிமையாளர் உட்பட 7 பேர் கைது. 25 கிலோ எடையுள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (58). இவர், சவுகார்பேட்டையில் நகைக்கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த நான்கு ஆண்டுக்கு முன் இவரது கடையில் ஓய்வு பெற்ற ஐஜி-யின் மகன் மைக்கேல் என்பவர் 5 லட்சம் ரூபாய்க்கு இரண்டு யானை தந்தங்களை அடமானம் வைத்து பணம் வாங்கிச் சென்றுள்ளார். இதையடுத்து பணம் திருப்பி செலுத்த வேண்டிய காலஅவகாசம் முடிந்தும், அடமானம் வைத்த யானை தந்தத்தை மீட்கவில்லை.
இதனால், பிரபாகரன் இரண்டு யானை தந்தங்களை தரகர்கள் மூலம் விற்க முயற்சி செய்துள்ளார். இது குறித்த தகவல், சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து யானை தந்தத்தை வாங்கும் கடத்தல்காரர்கள் போல் சுங்கத்துறை அதிகாரிகள் நாடகமாடியுள்ளனர். போர்ட் கிளப்பிலுள்ள தரகர் ஒருவர் மூலமாக ஓய்வு பெற்ற ஐஜி மகனை தொடர்பு கொண்டு நகைக்கடை உரிமையாளரை அணுகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த தந்தங்களை 50 லட்சம் ரூபாய்க்கு விலை பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கேகே நகரில் உள்ள தனியார் காம்ப்ளக்ஸ் ஒன்றில் தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற போது, கடத்தல் காரர்கள் போல் நடித்துக் கொண்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக யானை தந்தத்தை விற்பனை செய்தவர்களை கைது செய்தனர்.
இந்நிலையில், அவர்களிடம் நடத்திய விசாரணையில் யானை தந்தத்தை விற்க முயன்ற அடகு கடை உரிமையாளர் பிரபாகரன் மற்றும் அவரது மகன் திவாகர் (40) தரகர்களான சுரேஷ் (40), செல்வகுமார் (38), ஆனந்தன் (56), குரு பிரசாத் (39), சுரேஷ்பாபு (45), ஆகியோர் விற்க முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து ஏழு நபர்களையும், இரண்டு யானை தந்தத்தையும் வேளச்சேரி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கருத்துக்கள்